Pages

Friday, August 9, 2013

தெரிந்த கோயிலும் தெரியாத அற்புதங்களும்

 மானிடப் பிறப்பில் எந்த ஒரு உயிரும் இறைவனை உண்மையான பக்தி மற்றும் இறைத் தொண்டினால் அடைய முடியும். இதை ஒரு தெய்வம் நிருப்பித்தால் இன்னும் ஆதாரம் வலுவாக இருக்குமல்லவா?. அப்படி  ஒரு நிகழ்வு தான் ஸ்ரீ ஆண்டாள். பூமாதேவியே ஸ்ரீ ஆண்டாளாக உருவெடுத்து   பெருமாளின் பால் தீராத பக்தி கொண்டு அந்த ரெங்கனையே மணாளனாக அடைந்தாள். இது எப்படி சாத்தியம்? இதில் உள்ள தூய பக்தியே சாட்சி.

  ஆனால் இந்தக் கதையெல்லாம் பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருக்கும். ஆகவே நான் இதைப் பற்றி இன்று பேசப் போவதில்லை. அந்த பெண்தெய்வத்தின் திருக்கோவிலில் உள்ள மிகுந்த அதிர்வுள்ள பகுதிகளைப் பற்றி பேசப் போகிறேன்.

   நான் விவரிக்கும் இடத்தைப் பார்த்து இந்த இடமா? என்று தயவு செய்து சந்தேகப் படாதீர்கள். இது பன்னெடுங்காலமாக முன்னோர்கள் வழிபாடு செய்து  அதை வழி வழியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச்  சொல்லிவிட்டுச் சென்ற இடங்கள் இது.

  சரி மெதுவாக ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவிலுக்குள் நுழையுங்கள். அங்கு மேல்தடாகத்தில் இருக்கும் பெருமாளை தர்சித்து விட்டு   கீழே பக்கத்தில் உள்ள சக்கரத்தாழ்வாரையும் யோக நரசிம்மரையும் வழிபட்டு விட்டு மெதுவாக நந்தவனத்திற்குள்  நுழையுங்கள். அமைதியே உருவான அந்த இடத்தில் பறவைகள்  தங்களுடைய கூவலால் அன்புடன் வரவேற்கும்.

     தாயார் பிறந்த அந்த இடத்தை தரிசித்துவிட்டு முன்புறமுள்ள அந்த மண்டபத்தில் கண்மூடி அமருங்கள். அங்குள்ள அதிர்வுகள்  நம் மனோரதங்களை சொல்லாமலேயே நிறைவேறி கொடுக்கும்.   அங்கிருந்து வெளியே வந்து ஆண்டாள் கோவிலுக்குள்  சென்று வழிபாடுகள் முடித்தபின் உள் பிராகாரத்தில் தாயாரின் கருவறைக்கு நேர் பின்னால் உள்ள படத்தின் கீழ் அமர்ந்தோ அல்லது நின்ற வண்ணமோ நமது வேண்டுதல்களை தாயாரிடம் தெரிவிக்கலாம். இந்தப் பகுதியில் தெரிவிக்கபடும் பிரார்த்தனைகள்  தாயாரால் உடனடியாக நிறைவேற்றப் படுவதாக ஐதீகம். இதை செயலிலும் காணலாம். ஆனால் இன்றைய கூட்டமான சூழலில் அமைதியாக அமரமுடியவில்லை அல்லது ஒருமுகப் படவில்லை என்றால் அங்கிருந்து கிளம்பி வெளிபிராகாரத்திற்கு வந்துவிடுங்கள்.

      வெளிபிராகாரத்தில் உள்ள கை கூப்பிய ஆஞ்சநேயரை வணங்கி  அப்படியே நேராகச் சென்றால்  அங்கு பெரும்பாலும் பூட்டப் பட்டிருக்கும் ஸ்ரீராமர் சன்னதியில் அமருங்கள். இப்பகுதிக்கு பொது மக்கள் அதிகம் வருவதில்லை. ஆளரவமற்ற அந்தப் பகுதியில்  கண்மூடிஅமர்ந்தாலே  போதும் நம் உண்மையான முகம் நமக்குத் தெரிந்துவிடும். இந்த சக்திமிக்க அதிர்வுள்ள இந்த இடம் எதிர்காலத்தில் பெருந்திரளான மக்கள் அமர்ந்து வழிபடும் இடமாக  மாறப் போவதாக முன்னோர்கள் கூறியுள்ளனர்.

   பிறகு  அப்பிராகாரத்தின் மறுபகுதியில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாளை வணங்கி வெளியே வந்துவிடலாம். ஆனால் இக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பகுதிக்குச் சென்று வழிபட்டு வந்தால் சர்வ நிச்சயமாக, மன் இறுக்கம் மறைந்து  ஒரு நிம்மதியை கோயிலைவிட்டு வெளிவரும்  முன்னரே உணர்வீர்கள் என்பது உறுதி.

  அடுத்த முறை ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தால் முயன்று பாருங்கள். பதில் கிடைக்கும்.
http://www.valaipookkal.com/
                                                                              புதிதாய் இன்னமும் சொல்வேன்......www.valaipookkal.comwww.thamizmanam.com

No comments:

Post a Comment