Pages

Tuesday, July 30, 2013

தெலுங்கானா - கிளர்ச்சியின் திறவுகோல்

  இன்று ஐக்கிய முன்னணி கூட்டணியில் உள்ள எல்லாக் கட்சிகளும் கூடி தனித் தெலுங்கானா என்ற மாநிலம் உருவாக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இனி இந்தியாவில் புதிய ஒரு மாநிலமாக தெலுங்கானா உருவாகும்.  இதன் மூலம் இந்திய வரைபடத்தில் ஒரு மாநிலத்திற்கான இடத்தில் புதிய வண்ணமாகத் தெரியும். அவ்வளவு தான். இதைத் தவிர வேறு எதுவும் புதிதாக நடந்துவிடப் போவதில்லை.

  இவ்வளவு நாட்களாக தனித் தெலுங்கானா கோரி போராட்டம் நடத்தியவர்கள் தெலுங்கானா என்ற மாநிலம் இல்லாததால் தான் ஆந்திரா மொத்தமும் வறுமையின் பிடியில் இருப்பது போலவும், நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது போலவும் பலவாறாக பேசி மக்களை, குறிப்பாக மாணவர்கள், அதிலும் குறிப்பாக கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களிலும் கிளர்ச்சியிலும் ஈடுபட மனமாற்றம் செய்தனர்.

  இனிமேல் மேற்சொன்ன எந்த கஷ்டமும் தெலுங்கானா மாநிலத்திற்கு வராது, தேனாறும், பாலாறும் வெள்ளமாக ஓடும் என்று நினைத்தால் அவர்கள் நினைப்பில் மண் தான் விழப் போகிறது. முதலில் நிர்வாகத்தில் எந்தெந்தப் பகுதி யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் ஏற்படும். அது ஒரு மாதிரியாக சரியான பின்புதான் மக்கள் சம்மந்தமான பிரச்சனைகளில் கவனம் செலுத்துவார்கள். இதற்கிடையில் தனித் தெலுங்கானா கூடாது என்று கூறும் அமைப்பினர்களின் கிளர்ச்சியை வேறு இரு மாநிலங்களும் அடக்க வேண்டியிருக்கும்.இதையெல்லாம் விட இந்த மாநிலங்களின் எல்லைப் பகுதியில் வாழும் சராசரி மக்களின் நிலையே மிகவும் கஷ்டத்திற்குரியதாக இருக்கும். இவர்கள் எந்த ஒரு, அரசின் உதவியைப் பெற வேண்டியிருந்தாலும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற குழப்பத்தின் காரணமாக அலைக்கழிக்கப் படுவார்கள். (இதில் அரசு அதிகாரிகளின் அலட்சியம் மிக அதிகமாக இருக்கும்)

    இனி மத்திய அரசிற்கு புதிய சிக்கல் ஏற்படும். இனி காங்கிரஸ் வரப் போவதில்லை என்பது வேறு விஷயம். இருந்தாலும் பா.ஜ.க வும் தனித் தெலுங்கானா விற்காக போரட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் எதிர்காலத்தில்  எந்த ஒரு தனி மாநிலம் கேட்டு போராட்டம் நடந்தாலும் பா.ஜ.க வும் பதில் சொல்ல வேண்டியிருக்கும். உடனடியாக கூர்க்காலாந்து பிரச்சனை துவங்கிவிடும். அவர்கள் ஏதடா சாக்கு என்று காத்திருந்தார்கள். அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விடும்.

   பிறகு விதர்பா மாநிலம், அப்புறம் வேறு ஏதாவது ஒன்று என்று புதிது புதிதாக கிளம்பிக் கொண்டே இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்குள்ள லெட்டர் பேட் கட்சிகள் எல்லாம்  தங்களுக்கென்று மாநிலக் கோரிக்கையை வைக்கும். இதன் மூலம் ஆட்சியில் உள்ளவர்களுக்கு இந்த கிளர்ச்சியாளர்களை அடக்கவே நேரம் சரியாக இருக்கும். சாலையின் ஒரங்களில் உள்ள மரங்கள் யாவும் நடு ரோட்டில் கிடக்கும். பெரும் பாறைகள் யாவும் தண்டவாளங்களுக்கு  குறுக்கில் போடப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி கீழ் நோக்கிச் செல்லும். இதைத் தவிர வேறுஎதுவும் புதிதாகவும் உருப்படியாகவும்  நிகழப்போவது ஓன்றும் இல்லை.http://www.thamizmanam.com/www.valaipookkal.com

Sunday, July 28, 2013

அரசியல்வாதிகளா? ஆசிர்வாதம் பெற்றவர்களா?

 தயாளு அம்மாளுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள்  பரிசோதனை. - செய்தி. இந்தக் கட்டுரையை நாம் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் முத்தமிழ் அறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களது மனைவியாருக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம். அல்லது அவருக்கும் அவர்மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கும் சம்மந்தம் இல்லை என்று கூறப்படலாம்.இதுவே ஒரு குப்பனுக்கோ சுப்பனுக்கோ நிஜமாக இந்த வியாதி இருந்தாலும் அது நீதிமன்றங்களின் காதில் ஏறுமா என்பது  கேள்விக்குறியே.

  ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் எந்த ஒரு அரசியல் தலைவரும் எந்த ஒரு வில்லங்கத்தில் மாட்டிக் கொண்டாலும் ஏதாவது ஒர் வியாதி பெயரைச் சொல்லி முதலில் தற்காலிக விடுதலை பெறுகின்றனர். (ரூம் போட்டு யோசிப்பார்களோ) பிறகு சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப்  பயன்படுத்தி தப்பித்து விடுகின்றனர் அல்லது ஜாமின் என்றபெயரில் தங்கள் காலம் முடியும் வரை சுதந்திரமாக வெளியில் உலாவுகின்றனர் மேலும் தப்புக்கள் செய்தபடி.இவர்கள் இறந்தால் முக்கிய சாட்சி இல்லை என்று காரணம் காட்டி அந்த வழக்கு தள்ளுபடி செய்யப் படுகிறது. மேலும் இறந்த அரசியல் தலைவர் தியாகி ஆக்கப் பட்டு சிலையாய் முக்கிய இடங்களில் நின்று மக்களுக்கும் பறவைகளுக்கும் அருள் பாலிக்கின்றனர். இதில் எந்த ஒரு கட்சியும் விதிவிலக்கு இல்லை.

    அவர்களது  வாரிசுகள் அவர்கள் சேர்த்த சொத்துக்களை வைத்துக் கொண்டு பெயரளவிலோ அல்லது முழுமுச்சாகவோ மக்கள் தொண்டு(அரசியல்) புரிகின்றனர்.இப்படிப் பட்ட தலைவர்களைக் கொண்ட தொண்டர்கள் எப்படி இருப்பார்கள் என்று சொல்லத்தேவையில்லை. இங்கு மக்கள் நலம் என்பது புறக்கணிக்கப்பட்டு சுயநலம் மேலோங்கி நிற்கிறது.

       இதற்கப்பாலும் இந்தியா முன்னேற்றப் பாதையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருவது என்பது முற்றிலும் மக்களின் பிரார்தனையே. பாரதி இன்று இருந்தால் " அரசியல்வாதியாய் பிறக்கவே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்று பாடியிருப்பார். "என்று மறையும் இந்த அரசியல்வாதிகளின் அட்டகாசம். என்று மலரும் ஒரு தூய தேசம்" என்று நீங்கள் கேட்பது என் காதிலும் விழுகிறது.www.valaipookal.comhttp://www.thamizmanam.com/

 

 

Thursday, July 25, 2013

தமிழால் இணைவோம்: கூடங்குளம் - ஒரு அறிக்கை அணு உலை.

தமிழால் இணைவோம்: கூடங்குளம் - ஒரு அறிக்கை அணு உலை.:  ஒரு வழியாக கூடங்குளம் முதல் அணு உலையை செயல்பட வைத்து, இரண்டாவது அணு உலைக்கு மாதிரி எரிபொருள் நிரப்பும் பணி துவங்கியுள்ளது. இதில் என்ன ஆச்ச...

கூடங்குளம் - ஒரு அறிக்கை அணு உலை.

 ஒரு வழியாக கூடங்குளம் முதல் அணு உலையை செயல்பட வைத்து, இரண்டாவது அணு உலைக்கு மாதிரி எரிபொருள் நிரப்பும் பணி துவங்கியுள்ளது. இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? அது ஒன்றும் இல்லை. ஆனால் இனிமேல் தான் அறிக்கைப் போர் ஆரம்பிக்கும். இதற்கு   சிங்கம் -2, பில்லா-2 மாதிரிஅணு உலை -2என்று பெயர் சூட்டப்பட்டு காட்சிகள் அரங்கேறும்.

   முதலீல் துவக்குவது அணு உலை எதிர்ப்பாளர்கள். இவர்கள் தங்களுக்கென்று ஒரு கோஷ்டியைச் சேர்த்துக் கொண்டு அற(அறிக்கை)ப் போரை ஆரம்பிப்பார்கள். மறுபடியும் முதலிலிருந்து அணு உலைப் பாதுகாப்பற்றது என்று தொடங்கும்.

  அடுத்த காட்சி வேறு வேலையின்றி, தங்கள் முகங்களை மக்கள் மறந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் ஒரு இடம் கூட ஜெயிக்காத தலைவர்கள் தங்கள் போராட்டப் பணியைத் தொடங்குவார்கள். இவர்களது  வேலை போராட்டக்காரகளுக்கு ஆதரவு மற்றும் அணு உலை என்றால் என்ன என்று தெரியாத பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் கல்லூரி வகுப்புக்களில் கவனம் செலுத்த விரும்பாத மாணவர்களைத் தேர்ந்தெடுத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவார்கள்.

   இதற்கிடையில் காமெடிக் காட்சியாக மத்திய அமைச்சர் நாராயணசாமியின் அறிக்கைகள் வரும். அவையாவையும் "வரும் ஆனா வராது" பாணியில் இருக்கும்.

  திரிலிங்காக இருக்கவேண்டிய இடங்களை தொலைக் காட்சி ஊடகங்கள் பிடித்துக் கொள்ளும். இதற்கென்று அணு உலை ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள்( இவர்கள் பூமியைக் காக்கும் பொது நலவாதிகள்) மற்றும் கட்சிகாரர்கள் என 4 பேர்கள் கொண்ட ஒரு குழு பேசத்துவங்குவார்கள். இவர்கள் கடுமையாக சண்டை போட்டுக் கொள்ளும் போது விளம்பர இடைவெளி வந்துவிடும். இதற்கிடையில் 2 கதாநாயகன் உள்ள சண்டைக் காட்சிகளில் யாருக்கு வெற்றி என்பதை தீர்மானிக்க இயக்குனர்கள் திணறுவது போல நீதிமன்றங்கள் பொத்தாம் பொதுவாக ஒய்வு பெற்ற அரசு அதிகாரிகள், விஞ்ஞானிகள், மற்றும் பொது நல விரும்பிகள் என்று ஒரு குழு அமைத்து சண்டைக் காட்சிகளை முடிவுக்குக் கொண்டுவது கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவார்கள்.

   கிளைமேக்ஸ் காட்சியாக அணு உலை ஒருநாள் செயல் படத்துவங்கும். அன்று தான் உச்சகட்ட அறிக்கைப் போர் நடக்கும். ஆதரவாளரகள் உண்மை!க்கு கிடைத்த வெற்றி என்றும், எதிர்ப்பாளர்கள் அடுத்தகட்ட போரட்டம் பற்றி கூடி முடிவெடுப்போம் என்றும் தெரிவிப்பார்கள்.(அது வரை அடுத்தகட்டம் பற்றி யோசிக்கமாட்டாகளாம்) ஒரு பிரிவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்குவார்கள். இன்னொரு பிரிவினர் கறுப்புக் கொடி குத்தி துக்கம் அனுஷ்டிப்பார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள்  இவர்களுக்கு வேறு வேலையே இல்லை என்று கூறிவிட்டு தனது தினப் படியான வேலைகளைத் தொடந்து செய்வார்கள். இப்படியாக அணு உலை சினிமாவிற்கு end card  போடப்படும்
    ஆனால் ஒன்று இனி இந்தியாவில் ஒரு அணு உலையில் மின்சாரம் வருகிறதோ இல்லையோ அறிக்கை  தவறாமல் வரும் என்பது மட்டும் உறுதி.http://www.thamizmanam.com/
  

Thursday, July 18, 2013

வாலி என்னும் வாலிபக் கவி

  கவிஞர் வாலி  இன்று மாலை எமனின் இரக்கமின்மையால் இறந்தார். புகழாரம் சூட்ட பலர் உண்டு. ஆனால் ஒரு சாமானியனின் புலம்பலாக இதை சம்ர்ப்பிக்கிறேன்.

   "வாலிபக் கவி" என்று வாலிக்கு ஒரு பெயர் உண்டு. அது அவரின் எழுத்துக்குக்  கிடைத்த மரியாதை. புராண வாலிக்கு ஒரு சிறப்புண்டு. அவரை எதிர்த்துப் போரிடுபவர்களின் பலத்தில் பாதி வாலிக்குச் சென்றுவிடும் என்று. ஆனால் நமது கவிஞர் வாலிக்கோ அவர் எதிரில் யார் நின்றாலும் சரி மொத்த பலமும் கவிஞருக்குச் சென்று விடும். அப்படிப் பட்ட ஒரு சிறப்பைப் பெற்றவர். அது அழகிய சிங்கர் ஜீயராக இருந்தாலும் சரி அருமையான இசை அமைப்பாளராக இருந்தாலும் சரி.

     அவரின் திரைத் துறை சாதனைகளைப் பற்றிச் சொல்ல பலர் இருக்கின்றனர். ஆனால் அவரது அவதார புருஷனைப் படிக்கும் போது சம கால கம்பராகத் தெரிகிறார். ஆனால் "ஆசை யாரை விட்டது" என்று முகவுரையும் எழுதியிருக்கிறார். மகாபாரதத்தையும், கிருஷ்ணவிஜயத்தையும், இராமானுஜரையும் கவிதையாய் நமில் கலந்த அந்த ஜீவன் இப்போது காற்றில்...

   வாலி என்று சொன்னால் வீரம் வருகிறதோ இல்லையோ கவிதை கண்டிப்பாக வரும். தமிழுக்கு நிகரான ஆங்கிலப்புலமை அவரது சிறப்பு. கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு நடந்த இரங்கல் கூட்டத்தில் வாலி எழுதிய ஒரு கவிதை," எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேரில் எமனும்  ஒருவன். ஒரு அழகான கவிதைப் புத்தகத்தை கிழித்துவிட்டான்"

     அதைச் சற்றே மாற்றி

       "  கவிதைப் புத்தகம் என்றாலே காலனுக்குப் பிடிக்காதோ
           மரணத்தின் மூலம் ஒரு மானிடக் கவிதையை கிழித்துவிட்டான்"

valaipookal.comhttp://www.thamizmanam.com/

Wednesday, July 17, 2013

மொழிப் பாடங்கள் - இனிப்பா? திணிப்பா?

  சில நாட்களுக்கு முன் ஒரு  நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளில் பெரும்பாலோர் "தமிழ் பாடத்தை ஒரு கட்டாயத்தின் பேரில் , விருப்பமின்றி படிப்பதாக" கூறியது மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளித்தது. இதற்கு காரணம் யார்? என்ன? என்பதையெல்லாம் பார்த்தோமேயானால் அதற்கு ஆட்சியாளர்களும், பெற்றோர்களும் தான்.

    தமிழ் மேல் காதல் கொண்ட ஆட்சியாளர்களால் தமிழ்க்கு மரியாதை வந்ததாகத் தெரியவில்லை. மாறாக அதன் மீது வெறுப்புதான் அதிகமாகியுள்ளது. காரணம் அவர்கள் வீட்டுக் குழந்தைகள் ஆங்கிலவழிக்கல்வியும் ஹிந்தியும் மேலும் வேறு ஏதேனும் மொழியும் கற்று தங்கள் அடித்தளத்தை பலப்படுத்திக் கொள்ள, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் வீட்டுக் குழந்தைகள் தமிழ் தவிர வேறு எந்த மொழியும் தெரியாத காரணத்தினால் வேறு எந்தமாநிலத்திலும் வேலை வாய்ப்பு பெற வழியில்லாத நிலை ஏற்பட்டது.

     இதனால் பாதிக்கப் பட்ட ஒரு தலைமுறை தமிழை மட்டும் கற்பதால் பயன் இல்லை என்ற எண்ணத்திற்கு வந்தனர். இதன் விளைவு முற்றிலும் ஆங்கிலக் கல்வி என்ற முடிவிற்கு வந்தனர்.இதுவும் தவறான முடிவு. காரணம் அடிப்படைக் கல்வி எனப்படும் வாய்ப்பாடு, ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழிகளின் வார்த்தைகளுக்கு  அர்த்தம் ஆகியவை சரியான அளவில் குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. இதன்விளைவாக குழந்தைகள் மேற்வகுப்புகளுக்கு வரும்போது பாடங்களை புரிந்து கொள்ளமுடியாமல் குருட்டு மனப்பாடம் செய்கின்றனர்.

    ஆனால் இதைப் பற்றி பெற்றோர்களுக்கோ அல்லது அந்த குழந்தைகள் படிக்கும் கல்வி நிறுவனங்களுக்கோ கவலை துளிக் கூடக் கிடையாது. பெற்றோர்களைப் பொறுத்தவரை தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது என்று சொல்லிக் கொள்வதில் பெருமை. கல்வி நிறுவனங்களுக்கோ 100% தேர்ச்சி மட்டுமே குறி. ஆகவே அவர்களுக்கு தெரிந்து கொள்வது, புரிந்து கொள்வது என்பதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. விளைவு தாய் மொழி எனக்கு பிடிக்கவில்லை என்ற பதில்.
   
    மற்றோர் பிரிவினர் இருக்கின்றனர். இவர்களுக்கு தங்கள் குழந்தைகள் ஹிந்தியில் உள்ள அத்தனை தேர்வுகளையும் 10 வகுப்பிற்குள் முடித்துவிட்டனர் என்று பெருமையடித்துக் கொள்ளவேண்டும். அதற்க்காக தமிழ் "அ,ஆ" வே  சரியாகத்தெரியாத வயதில் அவர்களை ஹிந்தித் தேர்வுகளை எழுத அனுப்புகின்றனர். இதன் விளைவு, அக்குழந்தைகள் எதையும் புரியாமல் படித்து  அந்த மொழியை பேசவும் தெரியாமல், புரிந்து கொள்ளவும் முடியாமல் "மொட்டையாக அட்டை"(MARK SHEETS)  களை மட்டும் சேர்க்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது.
         1000கணக்கான நேயர்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் தங்கள் குழந்தைகள் இப்படி பதில் சொல்வதை எப்படி அக் குழந்தைகளின் பெற்றோர்கள் சகித்துக் கொண்டு இருக்கிறார்கள்?

     ஒரு குழந்தை தன் தாய்மொழியை பிடிக்கவில்லை என்பது தன் தாயை, தாய் நாட்டை பிடிக்கவில்லை என்று கூறுவதற்கு சமம். இந்தக் குழந்தைகள் எப்படி அவர்களின் பெற்றோர்களுக்கும், அவர்கள் ஆளாக்கிய இந்த தாய் திருநாட்டிற்கும் நன்றியுடன் இருக்கப் போகிறார்கள். ஜெர்மனியிலோ, சீனாவிலோ ஆங்கிலத்தில் பேசினாலும் அவர்கள் மொழியில் தான் பதில் கூறுவார்கள். ஆனால் இரண்டு தமிழர்கள் நேரில் சந்தித்தால் முதலில் தமிழில் பேசிக் கொள்ளமாட்டார்கள். அங்கு ஆங்கிலம் தான் முக்கிய இடத்தை வகிக்கும்.

     திரைப் படத்துறையினர் இன்னமும் மோசம் . அவர்கள் கலையை வளர்ப்பதாகச் சொல்லி தமிழை முற்றிலுமாக கொலை செய்கின்றனர். "ல,ழ, ள" எல்லாவற்றிக்கும். "ல " என்றே உச்சரிக்கின்றனர். அவ்வாறு உச்சரிப்பவர்களை கவிப் பேரரசு களும் கொண்டாடுகின்றனர். இவர்களெல்லாம் தமிழுக்காக உழைப்பவர்களாம்! தமிழுக்காக தன் உயிரையும் கொடுப்பவர்களாம்!!. முதலில் இவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கட்டும்.

   தமிழ் குடிதாங்கிகளும் இடிதாங்கிகளும் தங்கள் குழந்தைகளை தமிழில் ஒரு வாய்ப்பாடு  அல்லது ஒரு திருக் குறளை பிழையின்றி சொல்லச் செய்யட்டும். அதன் பிறகு இவர்கள் தமிழுக்காக இன்னுயிரை ஈந்தட்டும்.  ஏற்கனவே  தமிழாசிரியர்களை பெரும்பாலானவர்கள் மதிப்பதில்லை. இந்த மாதிரி இன்னும் இரண்டு நிகழ்ச்சிகள் வந்தால் போதும் சுத்தமாக மரியாதை என்பது இல்லாமல் போய்விடும். நமக்கே நம் மொழி மீது நம்பிக்கையில்லை எனின் "மெல்லத் தமிழ் இனி சாகும்" நாள் தொலைதூரத்தில் இல்லை.http://www.thamizmanam.comvalaippookkaL.com

Friday, July 12, 2013

கார்ட்டூன் சானல் என்னும் கயவன்.

    இன்றைய குழந்தைகள் சாப்பாடு கூட இல்லாமல் இருக்கும். ஆனால் கார்ட்டூன் சானல் இல்லாமல் இருக்காது.  அந்த அளவிற்கு கார்ட்டூன் என்னும்  அசுரன் அவர்களை ஆக்கிரமித்து இருக்கிறான்.  காரணம் யார்? முதலாவதாக சுட்டிக் காட்டப் படுவது பெற்றோர்கள் தான்.  15 வருடங்களுக்கு முன்பு வரை ஒரு சராசரி குடும்பத்தில் உள்ளவர்கள்  குழந்தைகளுக்கு உணவு கொடுக்க ஏதேனும் கதைகளைச் சொல்லுவார்கள். இது பறவைகள், நிலா என்பதிலிருந்து ஆரம்பிக்கும்.

    தற்பொழுது பிறந்த அன்றே குழந்தைகள் புத்திசாலியாக வேண்டும்! என்ற பெயரில் பெற்றோர்கள்  வாயில் நுழையாத நர்சரி ரைம்ஸ்கள கேட்க வைக்கிறார்கள். இதிலிருந்து தான் அக்குழந்தைகளின் அடிமை வாழ்வு ஆரம்பமாகிறது. குழந்தைகள் சற்று வளர்ந்ததும் கார்ட்டூன் சானல்களை கவனிக்க வைக்கிறார்கள். இது தான் பெற்றோர்கள் செய்யும் மாபெரும் தவறு.

    புரியாத அந்த பிஞ்சு நெஞ்சங்களில் power rangers ம், டோரிமானும் கதாநாயகர்களாக இடம் பிடிக்கின்றனர்.  அவர்கள் பேசும் அபத்தமான தமிழை குழந்தைகளும் பேசுகின்றனர் ( இதை பெற்றோர்களும் ரசிக்கின்றனர் என்பது வேறு விஷயம்). இந்த கார்ட்டூன் சானல்களில் ஒளிபரப்பப் படும் 99% நிகழ்ச்சிகள் மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப் படுபவை. அவர்களின் நடையுடை பாவனகளுக்கு ஒத்துவாராத, எந்த ஒரு வட்டார வழக்கில் புழங்கப் படும் தமிழ் என்பதும் புரியாதபடி  ஒரு கேவலமான குரலில் மொழி மாற்றம் செய்யப் படுகிறது.

    இச் சிறு குழந்தைகளும் power rangers என்பது உண்மை என்று நம்பி அதைப் போலவே முகமூடி, உடைகளையணிந்து.  குதிக்கின்றனர். இப்படி குதித்து அடிப்பட்டது முதல் உயிர் இழந்தது வரை ஏராளமான உண்மைச் சம்பவங்கள் உண்டு. இந்த  நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முன்பு ஒரு மகா சிறிய எழுத்தில்  எச்சரிக்கை செய்கின்றனர். இதை வழங்கும் விளம்பரதாரர்களோ அவர்கள் பொருட்கள் விற்க இத்தகைய கார்ட்டூன் ஹீரோக்களின் உருவங்களை ஸ்டிக்கர்களாகவும், டாட்டூக்களாகவும் கொடுத்து குழந்தைகளை வாங்கத்தூண்டுகிறனர்.

    இனி வரும் காலங்களில் இம் மாதிரியான நிகழ்ச்சிகள் அதிகமாக வரும் . குழந்தைகள் படிப்பதைக் கூட ஒத்திப் போட்டூவிட்டு நிகழ்ச்சிகளைப் பார்க்கும். இதை ஓரளவாவது கட்டுப்படுத்த நினைத்தால் பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு சிறிய பாடல்களைப் பாடி உணவு கொடுங்ககள், தூங்கச் செய்யுங்கள். சற்று பெரிய குழந்தைகளானது நமது இதிகாச புராணங்களில் உள்ள கதைகளைச் சொல்லுங்கள். அதில் இல்லாத வீர தீர பராக்கிரமச் செயல்கள் யாவும் இந்த power rangers லோ அல்லது வேறு எந்த கார்ட்டூன் நிகழ்ச்சிகளிலோ இல்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அக் கதைகளின் இறுதியில்  சாகசங்கள் யாவையும் மறைக்கப் பட்டு நல்ல நீதிகளே மேலோங்கி நிற்கும்.

     இவையெல்லாம் செய்யத் தவறினால் பின்னால் சமூக வலைதளம்  என்னும் பகாசுரனிடம்  சிறைப் பட வழிவகுக்கும். தங்கள் குழந்தைகளுக்கு அர்ஜுன் என்றும், நகுல் என்றும்,  பெயர் வைத்தால் மட்டும் போதாது. அப்பெயர்களுக்குரிய  நாயகர்களின் வரலாற்றையும் எடுத்துக் கூற வேண்டும். இல்லையென்றால் அப் பெயர்கள் யாவும் வெறும் "பெயரளவில்" தான் இருக்கும்.http://www.thamizmanam.com/

Tuesday, July 9, 2013

ஒரு சீரியஸான காமெடி

    இன்றைய நாட்களில் 30 வயதை தொட்டவர்களில் பலர் கூட்டுக் குடும்பத்தில் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. இன்று ஏன் கூட்டுக் குடும்பம் மறைந்து கொண்டு வருகிறது என்பதை இறுதியில் பார்ப்போம்.
 
     கூட்டுக் குடும்பம் என்பது ஒரு அலாதியான அனுபவம். அதை அனுபவித்தவர்கள் இன்று தனிக்குடித்தனமாக இருந்தாலும் மனதளவில் அந்த வாழ்க்கையை விட்டு வெளியே வரமாட்டார்கள். கூட்டுக் குடும்பத்தைப் பொறுத்தவரை. பெரியப்பா, சித்தப்பா மக்கள் என்ற பேதம் எதுவும் இருக்காது. குடும்பத்தின் மூத்த உறுப்பினர்தான் எல்லாப் பொறுப்புக்களையும் ஏற்று வழிநடத்துவார்.


    அதில் சண்டைகள் வரும் கோபம் இரூக்கும் .ஆனால் பாசத்திற்கு குறைவு இருக்காது. நிறைய அனுபவங்கள் கிடைக்கு. எல்லாவற்றைப் ப்ற்றியும் விவாதம் நடக்கும். சாதாரண தேங்காய் தொகையலும் சுட்டஅப்பளமும்  கூட தேவாமிருதமாக இருக்கும். எல்லாருடையா மானமும் அனைவர் முன்னிலும் வாங்கப்படும். (குறிப்பாக பரிட்சை மார்க்குகள்) எம்.எஸ்.வி இசை சிறந்ததா? இளையராஜா இசை சிறந்ததா என்று வாதம் நடக்கும். இன்று 60, to 70 வயதில் இருப்பவர்கள் எம்.எஸ்.வி தான் best. என்று சொல்ல இல்லை ராஜா தான் best  என்று கட்சி கட்டிக்கொண்டு மேற்கோளோடு வாதம் நடக்கும்.( அன்று ராஜா வின் இசையை விமர்சித்த பெரிசுகள் இன்று ரகுமானின் இசையை விமர்சிக்கின்றனர். இது பெரிசுகளின் style. மாற்றமுடியாது.)

     ஒருவருக்கு லேசான காய்ச்சல் என்றால் கூட வீட்டின் பெரியவர்கள் முதல் கடைக்குட்டி வரை தனக்குத் தெரிந்த மருந்து பெயர்களையெல்லாம் சொல்லி,பாட்டி வைத்தியம் வரை மருத்துவ உபதேசம் செய்து விட்டு எதற்கும் டாக்டரிம் ஒரு முறை காட்டிவிடு என்று முத்தாய்ப்பு வைப்பார்கள். (இதில் அதிகம் கடுப்பாவது பெற்றோர்கள்.ஆளாளுக்கு அறிவுரை கூறுவதால்.)

    விருந்தினர்கள் வந்தால் அதிகம் குஷியாவது குழந்தைகள் தான்.ஏனெனில் படிக்கவேண்டாமே. அம்மாவுக்கும் கவனிக்க நேரம் இருக்காது. (அவர்கள் சென்றபின் ஒரு double கவனிப்பு இருக்கும் என்பது ஒரு தனிக் கதை). கல்யாணம் என்று வந்துவிடாலோ கேட்கவே வேண்டாம். 10 நாட்களுக்கு முன்னதாகவே வீடு களை கட்டிவிடும். பட்சணம், பூ என்று ஒரு கலவையான வாசனை இருக்கும்.

   நமக்கு டியஷன் எடுக்கும் ஆசிரியர் வந்தார் என்றால் சப்த நாடியும் ஒடுங்கி, அந்த ஆசிரியருக்கு மனத்திற்குள் மொத்த பரம்பரைக்கும் திட்டு விழும். அவர் தன் பங்கிற்கு ஏதாவது ஏழரையைப் போட அதையும் மொத்த மூளையையும் பயன்படுத்தி சமாளிக்க வேண்டியிருக்கும்.

   இப்படி ஒர் அற்புதமான சூழல் தான் கூட்டுக் குடும்பம். இத்தனை இருந்தும் இன்று படிப்படியாக மறைய காரணம் என்ன? இதைப் பற்றி சீரியசாக விவாதிக்க திண்டுக்கல் லியோனி இருக்கும் போது நான் தீர்ப்பு கூறுவது சரியாகாது. அதனால் அந்தப் பொறுப்பை அவருக்கே விட்டு விடுகிறேன்.

ஹி.....ஹி... (நன்றி. குமுதம் அரசு பதில்கள்)http://valaipookal.com

Friday, July 5, 2013

எங்கே செல்லும் இந்த பாதை

 பெற்றோர்களே உங்களுக்கு 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்ளனவா? தயவு செய்து இக் கட்டுரையைப் படியுங்கள்.  சமீபகாலமாக பொது இடங்களுகளில்  பெரும்பாலான குழந்தைகள் செய்கிற விஷமங்களைப் பார்க்கும்போது இந்தத் தலைமுறை எங்கே செல்கிறது என்ற எண்ணம் வலுத்து வருகிறது. அதிலும் படித்த மேல்தட்டு மக்களின் குழந்தைகள் செய்யும்  சேட்டைகளுக்கு ஓர் அளவே இல்லை.

   உட்காரும் நாற்காலிகளை இழுப்பது, சுவிங்கம், சாக்லேட் போன்றவற்றை மேஜைகளில் ஒட்டுவதும், கண்ணாடிக் கதவுகளைத் திறந்துமூடுவதுமான விஷயங்களை பெரும்பாலான பெற்றோர்கள் கண்டு கொள்வதில்லை. அந் நிறுவனங்களின் ஊழியர்களோ அல்லது அருகில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருப்பவர்களோ இதை எடுத்துக் கூறினாலும் அவர்கள் அக் குழந்தை அப்படித்தான் செய்யும் என்பது போல இருக்கிறார்கள்.சில பெற்றோர்களோ கோபத்தின் உச்சத்திற்கே சென்று உங்கள் நிறுவனப் பொருட்கள் வேண்டாம் என்று கூறிவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இதனால் கடைக்காரர்களுக்கு நஷ்டம் ஏதுவும் இல்லை. அப்பொருளை வேறு ஒருவருக்கு விற்பதோடு, அம் மாதிரி விஷம குழந்தைகளால் ஏற்படும் நஷ்டத்திலிருந்தும் காப்பாற்றப் படுகின்றனர்

   உங்கள் வீட்டில் உங்கள் குழந்தைகள் இப்படி செய்ய சம்மதிப்பீர்களா? அல்லது வேறு ஒரு குழந்தை உங்கள் வீட்டை இப்படி அசுத்தம் செய்தால்  மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வீர்களா? இந்த இம்சையை சமாளிக்க மால்கள் குழந்தைகள் விளையாட என்று ஒர் இடத்தை ஏற்படுத்தியுள்ளன. சிறு நகரங்களில் அவ்வாறு செய்ய வழிகள் கிடையாது.

   இப்படி  குழந்தைகள் வளர்ந்தால் நாளை இக் குழந்தைகளிடம் அகம்பாவமும் அதிகபிரசங்கித்தனமும் தானே குடி கொண்டிருக்கும்.இவர்களால் எப்படி ஒரு நல்ல சமுதாயத்தையும், தங்களின்  வாரிசாக   நல்ல மக்களையும் உருவாக்க முடியும்? உங்களுக்கு உங்கள் குழந்தைகள் மிகவும் உயர்வான விஷயம் தான். ஆனால் இவ்வாறு உங்கள் குழந்தைகள் வளர்ந்தால் உயர்வான ஒர் விஷயம் மிகவும் தாழ்வான நிலைக்குச் சென்றுவிடும் என்பது திண்ணம்.தகுந்த நேரத்தில் கண்டிக்காவிட்டால் குழந்தைகள் சர்வ நிச்சயமாக தவறாகத் தான் வளரும்.  இக் குழந்தைகளைப் பார்த்தால்,

               " எங்கே செல்லும் இந்த பாதை. யாரோ யாரோ அறிவார்" என்றே பாடத் www.valaipookal.com தோன்றுகிறது

Thursday, July 4, 2013

"கிள்ளுக் கீரைகளா? பொது மக்கள்"-- ஒரு வேதனைக் கட்டுரை

    இன்று முதல் என்.எல்.சியில் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது. இதன் மூலம் புதுச்சேரி, மற்றும் தமிழகம் மின்வெட்டால் பாதிக்கப்படும்  என்பது நிதர்சன உண்மை.  இப்பொழுதுதான் பருவமழை மற்றும் பல்வேறு இடங்களில் மின் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் மின்சாரம் தடையின்றி கிடைத்து வருகிறது.

    அப்பாடி என்று பெருமூச்சு விட்ட நேரத்தில் இப்படி ஒரு இடி. நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி இப்படி ஒரு முடிவு. அப்புறம் நீதிமன்றம், சட்டங்கள் போன்ற வை எதற்காக? மத்திய அரசும் சரி மாநில அரசும்  சரி, தொழிற்சங்கங்களும் சரி தமது நலனை மட்டுமே பெரிதாக கருதுகின்றனர்.

   மின்தடை ஏற்பட்டால் எவ்வளவு உற்பத்தி முடங்கும், மாநிலத்தின் வருமானம் முதல் தனிநபர் வருமானம் வரை எவ்வளவு பாதிக்கும் என்பது இவர்கள் அனைவருக்கும்  தெரியும். ஆனால் அதைப் பற்றியெல்லாம் இவர்களுக்குக் கவலையில்லை.

    மத்திய அரசு தற்போது நாடு இருக்கும் நிலையில் இப்படி ஒரு தேவையற்ற ஒரு முடிவை எடுத்து விட்டு முழித்துக் கொண்டிருக்கிறது. மாநில அரசு ஒரு நல்ல வழிகூறினாலும் அதை ஏற்க மத்திய அரசு தயாராக இல்லை. காரணம் தற்பொழுது ஆண்டுகொண்டிருக்கும் காங்கிரஸ் அரசுக்கு நாட்டையே தனியாரிடமும், அந்நிய நாட்டிடமும் அடகு வைப்பது தான் தலையாய கடமை. ஆகையால் அவர்கள் இதைப் பற்றி ஒரு பொழுதும் கவலைப் படமாட்டார்கள்

    அடுத்ததாக தொழிற்சங்கங்கள். இவர்களுடைய தலையாய கடமையே  வேலையே செய்யாமல் இருப்பது எப்படி என்பது தான். பேச்சுவார்த்தை என்று கூப்பிட்டால் இவர்கள் வைக்கும் முதல் கோரிக்கையே போரட்டம் நடந்த நாட்களையும் வேலைசெய்த நாட்களாக கருதி சம்பளம் அளிக்க வேண்டும் என்பது தான். சரி அந்த வேலை செய்யாத நாட்களில் ஏற்பட்ட இழப்புக்களை கூடுதல் நேரம் வேலை செய்து சரி செய்து கொடுப்பார்களா? என்றால் அதுதான் இல்லை.

  இவ்வாறு  அவரவர்கள் அவரவர் போக்கில் சென்றால் பாதிக்கப்படுவது யார் என்று பார்த்தால் திருவாளர் பொதுஜனம் தான். போரட்டம் என்ற பெயரில் கூத்தடிக்கும் போது அவசரமாக ஆஸ்பத்திக்குக் கூட செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. இதையெல்லாம் பற்றி இவர்கள் சிந்திப்பதேயில்லை.

    மத்திய அரசோ, மாநில அரசு மற்றும் தொழிற்சங்கங்களை கலந்தாலோசிகாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கிறது.  தொழிற்சங்கங்களோ இது தான் சாக்கு என்று வேலை நிறுத்தம் செய்கிறது.  இவர்களைப் பொறுத்தவரை பொதுமக்கள் வெறும் கிள்ளுக் கீரைகளாகவே தோன்றுகின்றனர் போலும். காலம் ஒருநாள் நிச்சயம் பதில் சொல்லும்.

Tuesday, July 2, 2013

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 'ஓ' போடு

  சப்தமில்லாமல் ஒரு சாதனையை நேற்று இரவு 11.45 மணிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்துள்ளனர். உலகளவில் வளர்ச்சியடைந்த சில குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே வைத்துள்ள இந்த நேவிகேஷன் செயற்கைக் கோளை இந்தியாவும் வெற்றிகரமாக அனுப்பி அந் நாடுகளின் வரிசையில் சேர்ந்துள்ளது.

   இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? இந்த செயற்கைக்கோளை அனுப்பிய நாடுகள் அனைத்தும் உலகளவில் வளர்ச்சியடைந்த வல்லரசு நாடுகளாகும். இந்தியாவின் ஒவ்வொரு வெற்றியும் அவர்களின் வயிற்றில் புளியை கரைக்கும் செயலாகும். இதனால் அவர்கள் நம் நாட்டிற்கு பல்வேறுவிதமாக மறைமுக தொந்தரவுகள் கொடுக்கக் கூடும். நமது அரசியல்வாதிகள் பற்றி கேட்கவே வேண்டாம். அந்நிய நாடுகள் காசு கொடுக்கும் என்றால் எதற்கும் தயாராகவே இருப்பார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் விஞ்ஞானி நம்பி நாராயணன் விஷயத்தில் நமது அரசியல்வாதிகளின் செயல்பாடு.

    இவையெல்லாம் மீறி நமது விஞ்ஞானிகள் ஒவ்வொரு செயற்கைக்கோளையும் வெற்றிகரமாக செலுத்தும் போதும் நாம் இந்தியன் என்ற உணர்வே மேலோங்கி நிற்கிறது.ஆட்சியாளர்களே உங்களிடம் இந்த நாடு "ராமர் பிள்ளை" களை ஆதரிக்கச் சொல்லவில்லை. மாறாக  இந்த நாட்டிற்காகவே அர்ப்பணித்து, அந்நிய நாடுகள் கொடுக்கும் மிகப் பெரிய தொகையை சம்பளமாக பெறமறுத்து இரவு பகலாக ராதாகிருஷ்ணன் தலைமையில் உழைக்கும் "இஸ்ரோ"  விஞ்ஞானிகளை  எந்தவிதமான கருத்து வேறுபாட்டிற்கும் இடமின்றி ஆதரியுங்கள்.

    இந்த பொன்னான தருணத்தில் செயற்கரிய சாதனகளைச் செய்துவிட்டு அமைதியாக அடுத்தவேலையைப் பார்க்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஒரு 
'ஓ' போடுவோம்.





Monday, July 1, 2013

"ரயில்வே" - ஏன் இந்த கொலைவெறி

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில்வேயிலிருந்து ஒரு அறிவிப்பு வெளியானது. அதன்படி ரயிலின் கழிவறைகள் சுத்தமாக இல்லையெனின் ஒரு குறிப்பிட்ட எண்ணிற்குத் தொடர்பு கொண்டு குறைகளைச் சொல்லலாம் என்பதாகும்.  ஆனால் ரயில்வே அதை காது கொடுத்துக் கேட்டமாதிரி தெரியவில்லை.

  இவையல்லாம் ஒருபுறம் இருக்க புதிய ரயில்கள் என்பது ரயில்வே அமைச்சரின் சொந்த மாநிலத்துக்குத்தான் என்பது எழுதப்படாத  விதி. அது நிதிஷ் குமாராக இருந்தாலும் சரி லல்லுவாக இருந்தாலும் சரி, மமதாவாக  இருந்தாலும் சரி. அதில் மட்டும் பேதமே கிடையாது. தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களில் முக்கியமாக செங்கோட்டை பகுதிக்கு  ஒரே ஒரு ரயில் தான் உள்ளது. பல முறை பல விதமாக கேட்டுப்பார்த்தும் கூடுதல் ரயில் என்பது எட்டாக் கனியாகவே உள்ளது

   மத்திய ரயில்வே மந்திரிகளோ "பெருமைக்கு எருமை ஓட்டும் விதமாக" பட்ஜெட்டில் புதிது புதிதாக ரயில்களை அறிவித்த வண்ணம் உள்ளனர்.

   சரி பட்ஜெட்டில் அறிவித்தபடி ரயில்களாவது உடன் ஒடத் தொடங்குகின்றனவா என்றால் அதுவும் இல்லை. காரணம் கேட்டால் பெட்டிகள் இல்லை, இஞ்சின்கள் இல்லை என்று நொண்டிச் சாக்கு வேறு.

   பயணசீட்டே எடுக்காமல் அதிகம் பேர் பயணிக்கும் மாநிலம் பீகார். அம்மாநிலத்திற்கு அளவுக்கு  அதிகமான ரயில்கள். டிக்கெட் எடுக்காமல் பயணிப்பது பாபம் என்று எண்ணும் தமிழ்நாட்டிற்கு ரயில்கள் மறுப்பு. வாக்கு வங்கி என்பதை மனதில் வைத்து வாக்கில்லாமல் ரயில்களை அறிவிக்கும் ரயில்வே மந்திரிகளே இந்தியா என்பது உங்களின் சொந்தமாநிலம் மட்டுமல்ல. எல்லா மாநிலங்களும் உள்ளடக்கியது என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். நமது மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களே உங்களை மக்கள் தேர்ந்தெடுப்பது என்பது பார்லிமெண்ட் காண்டீனில் சாப்பிட்டு விட்டு வருவதற்காக அல்ல. மக்களின் பிரதிநிதியாக பேசுவதற்காக எனபதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.